டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை அதிகமானோர்
குறிப்பிடாததால், தேர்வு மையத்தில் தேர்வு செய்ய, டி.ஆர்.பி., அனுமதி
வழங்கியுள்ளது.
ஜூலை 12ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது. காலையில், முதல் தாள்
தேர்வும் (இடைநிலை ஆசிரியருக்கானது); பிற்பகலில், இரண்டாம் தாள் தேர்வும்
(பட்டதாரி ஆசிரியருக்கானது) நடக்கிறது. தேர்வர்களுக்கு, 18ம் தேதியில்
இருந்து, 22ம் தேதிக்குள், "ஹால் டிக்கெட்' அனுப்பி வைக்கப்படும் என, துறை
வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
அனுமதி: இதுகுறித்து,
அவர்கள் மேலும் கூறியதாவது: விண்ணப்பித்த தேர்வர்களில் பலர், மொழிப்பாடம்
எது என்பதை குறிப்பிடவில்லை. தமிழ், கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு
ஆகிய மொழிப் பாடங்கள் உள்ளன. இதில், எதையுமே குறிப்பிடாத தேர்வர்கள்,
தேர்வு அறைக்குச் சென்றதும், தங்களது மொழிப்பாடத்தை தேர்வு செய்து, அதைப்
பற்றி, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். ஓ.எம்.ஆர்.,
ஷீட்டில் (விடைத்தாள்) உள்ள விவரங்களை தவறில்லாமல், சரியாகக்
குறிப்பிட்டால் போதும்.
ஐந்து மொழிகளில்... : இதற்கு
வசதியாக, ஒரே கேள்வித்தாளில், ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்ட கேள்விகள்
இருக்கும். இதில், தேர்வர்கள் தேர்வு செய்யும் மொழிக்கு தகுந்தபடி,
சம்பந்தப்பட்ட மொழி கேள்வித்தாளைப் பார்த்து, விடை அளிக்கலாம். 6.5 லட்சம்
பேர், டி.இ.டி., தேர்வை எழுதுவர். ஆங்கில மொழிப் பாடங்களை தேர்வு செய்த
தேர்வர்களுக்கு, ஆங்கிலத்தில் கேள்வித்தாள் இருக்கும்.
இவ்வாறு டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.