PAGEVIEWERS

இந்தியாவில் முதன் முறையாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லாத நோட்டுப்புத்தகம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் நேற்று துவங்கப்பட்டது.
150 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், 81 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர். திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, ""மார்க்'கைத் தவிர, மற்ற அனைத்து திட்டங்களையும் விலையில்லாமல் வழங்கிவிட்டோம்'' என்றார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில், திட்ட துவக்க விழா, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. துறை முதன்மைச் செயலர் சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் மணி வரவேற்றார்.

திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு, விலையில்லாத நோட்டுப் புத்தகங்களை வழங்கி, அமைச்சர் சிவபதி பேசியதாவது:
இந்தியாவில், முதல் மாநிலமாக தமிழகத்தில் இத்திட்டம் துவக்கப்படுகிறது. அரசுக்கு நிதிச்சுமை இருந்தபோதும், தமிழகம் 100 சதவீத எழுத்தறிவை பெற வேண்டும் என்பதற்காக, பட்ஜெட்டில் அதிகபட்சமாக 14 ஆயிரத்து 551 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டார். வருங்காலத்தில், இந்தியாவில் 100 சதவீத எழுத்தறிவை பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும். ஏழை, எளிய பெற்றோர், நோட்டுப்புத்தகம் வாங்க சிரமப்படுவதை அறிந்த முதல்வர், இத்திட்டத்தையும் அமல்படுத்த உத்தரவிட்டார்.

விலையில்லாத சைக்கிள், ஆண்டுக்கு நான்கு செட் சீருடைகள், காலணி, புத்தகப்பை, அட்லஸ், கலர் பென்சில் உள்ளிட்ட பல்வேறு விலையில்லாத திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், விலையில்லாத நோட்டுப் புத்தகம் திட்டம் மட்டும், 150 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதனால், 81 லட்சத்து 2,128 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.


ஆசிரியர், மாணவ, மாணவியரை, தங்களது பிள்ளைகள் போல் பார்க்க வேண்டும். மாணவ, மாணவியரும், ஆசிரியரின் கண்டிப்பை, பெற்றோர் வழங்கும் அறிவுரையாக கருதி ஏற்க வேண்டும். ஆசிரியர், மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். மாணவ, மாணவியர், தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மொத்த்தில், "மார்க்'கைத் தவிர, மற்ற அனைத்து திட்டங்களையும் விலையில்லாமல் வழங்கி வருகிறோம்.


இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.

முன்னதாக, துறை முதன்மைச் செயலர் சபிதா பேசியதாவது:
பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, இரு முறை முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது, ""மாணவர்களுக்கு இன்னும் வேறு ஏதாவது செய்ய வேண்டி உள்ளதா?'' எனக் கேட்டு, நோட்டுப் புத்தகம் மட்டும் வழங்கவில்லை என்ற தகவல் அறிந்ததும், அதையும் வழங்க உத்தரவிட்டார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது,
முதல் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டுப் புத்தகமும் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த பருவங்களுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், உரிய காலத்திற்குள் வழங்கப்படும். இவ்வாறு செயலர் சபிதா பேசினார்.

பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால், தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

மின் சிக்கனம் குறித்து பிரசாரம்:
அனைத்து நோட்டுப் புத்தகத்தின் பின்புறம், "மின் சிக்கனம்; தேவை இக்கணம்' என, மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து, ஒரு பக்கத்தில் பல்வேறு தகவல்களை, மாணவ, மாணவியருக்கு தெரிவித்துள்ளனர். மின் சிக்கனத்தின் அவசியத்தை, இளம் வயதிலேயே மாணவ, மாணவியர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, இப்படி ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தின் பின்புற அட்டையில், மாணவர்களுக்கான சுவையான புதிய தகவல்கள், "கார்ட்டுன்' படங்களுடன் தரப்பட்டுள்ளன.
பல்வேறு வண்ணங்களில் நோட்டுப் புத்தகங்கள்:
இலவச நோட்டுப் புத்தகங்கள், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. இந்த நோட்டுப் புத்தகங்கள், மாணவரைக் கவரும் வகையில், பல்வேறு வண்ணங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தின் பின்புறம், எந்த வகுப்புக்கான நோட்டுப்புத்தகம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்த பாடம் சார்ந்த பொருள்படும்படியான படங்கள், நோட்டுப் புத்தகத்தின் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் சின்னம் மற்றும் முதல்வரின் படமும் பொறிக்கப்பட்டுள்ளன.

நன்றி:



No comments:

Post a Comment