PAGEVIEWERS


நந்தனத்தில் நாளை 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: தமிழக முதல்வர் வழங்குகிறார்


கல்வித்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் 18,382 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு
செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2308 பேருக்கும் பணி நியமன ஆணை ஒரே இடத்தில் வழங்கப்படுகிறது. மேலும் 92 லட்சம் பள்ளி மாணவ - மாணவிகள் பயன்பெறும் நலத்திட்ட உதவிகளும் தொடங்கி வைக்கப்படுகிறது.

கலர் பென்சில், அட்லஸ், புத்தகப்பை, செருப்பு, சீருடை, க்ரையான்ஸ் போன்ற பள்ளி மாணவர்களுக்கான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட விழா நடக்கிறது.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் பகல் 12 மணிக்கும் நடக்கும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு கல்வி திட்டங்களை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு நல உதவிகளை வழங்குகிறார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. விழாவில் 36 ஆசிரியர்களுக்கு மட்டும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பணி நியமன ஆணையை வழங்குகிறார். மீதமுள்ள ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் பணி நியமன ஆணையை வழங்குகிறார்கள்.

விழாவிற்கு பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர். சிவபதி முன்னிலை வகிக்கிறார். தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்புரை நிகழ்த்துகிறார். முதன்மை செயலாளர் சபிதா, பள்ளிக் கல்வி இயக்குனர் கு.தேவராஜன், தொடக்கக் கல்வி இயக்குனர் வி.சி. ராமேஸ்வர முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இதற்காக 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் பஸ்களில் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் வரும் ஆசிரியர்கள் 38 பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு குளியல் அறை, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இடை நிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இன்று காலை 7 மணி வரை விடிய விடிய நடந்து முடிந்துள்ளது. ஒரே நாளில் 9000 ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்துள்ளது கவுன்சிலிங் வரலாற்றில் இதுவரை இல்லாதது ஆகும்.

No comments:

Post a Comment