PAGEVIEWERS

போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி
போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண் வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் போலிகள் அதிகரித்துள்ளன. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த, ஐந்து ஆசிரியர்கள் சமீபத்தில், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்; மற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. போலி சான்றிதழ் பிரச்னையை தடுக்க, புதிய அடையாள எண் திட்டத்தை, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு சான்றிதழ்களில் நிரந்தர, 'ஸ்மார்ட்' எண் தரப்படும்.

இந்த எண்ணை, பள்ளிக் கல்வித்துறையின், 'இன்ட்ராநெட்' என்ற தனிப்பட்ட இணையத்தில் பதிவு செய்தால், மாணவனின் பெயர், பெற்றோர் முகவரி, மொபைல் போன் எண், ஆதார் எண், 2012 முதல் படித்த பள்ளிகளின் பெயர், ஜாதி, மதம், ரத்தப்பிரிவு போன்ற விவரங்கள் தெரியும். இந்த விவரங்கள், பள்ளிக் கல்வித்துறையின் இ.எம்.ஐ.எஸ்., என்ற மின்னணு அடையாள அட்டைக்காக, மாணவர்களிடம் ஏற்கனவே திரட்டப்பட்டு, 'டேட்டா பேஸ்' தகவல் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த கால வரலாறு
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், 'ஸ்மார்ட்' அடையாள எண் தரலாமா என, ஆலோசனை நடத்தி வருகிறோம். அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி செயலகத்தில் இருந்து விரைவில் அனுமதி கிடைத்தால், மாணவர்களின், 'ஸ்மார்ட்' எண்ணை, தேர்வின் போதே வழங்கி விடுவோம். இல்லையென்றால், தேர்வு முடிவுக்கு பின், சான்றிதழ்களில் பதிவு செய்வோம். இந்த எண், தமிழக உயர்கல்வி துறையால், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் இருந்து மாணவர்களின், 'டேட்டா பேஸ்' தகவல்கள் தரப்படும்.

'ஸ்மார்ட்' எண் திட்டம் அமலுக்கு வந்த பின், போலி சான்றிதழ்களை யாரும் தயாரிக்க முடியாது. ஏனென்றால், போலி சான்றிதழில், மாணவர்களின் கடந்த கால வரலாறுகளை பதிவு செய்ய முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
'ஹால் டிக்கெட்'டில் தேர்வு விதிகள்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழக்கமாக, முகப்பு தாள் மற்றும் விடைத்தாளில், தேர்வு விதிமுறைகள் ச்சடிக்கப்பட்டிருக்கும். இந்த விதிமுறைகளை மாணவர்கள் படிக்கும் போது, தேர்வு நேரம் குறையும். இந்த பிரச்னையை போக்க, 'ஹால் டிக்கெட்'டிலேயே விதிமுறைகளை பதிவு செய்ய, தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இந்த விதிமுறைகள் அச்சடிக்கப்படும்.

No comments:

Post a Comment