PAGEVIEWERS




சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற 8 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.எப்.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோரால் மனிதநேய அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் நோக்கில் இந்த அறக்கட்டளை சார்பில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் மூலமாக பல்வேறு சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பது மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தின் தலையாய நோக்கம் ஆகும். கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையம் 6 ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கட்டணமில்லா பயிற்சிக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் மாணவ-மாணவிகள் நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பயிற்சி வகுப்புகள், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பாடப்புத்தகங்கள், மாத இதழ்கள், தனித்தனி செய்தித்தாள்கள், தரமான உணவு, வசதியான தங்குமிடம், யோகா வகுப்பு, போக்குவரத்து வசதி, மருத்துவ பரிசோதனை, நேர்முகத்தேர்வுக்கு செல்வோருக்கு தரமான ஆடை, உணவு, டெல்லி சென்றுவர விமான டிக்கெட் என அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. நேர்முகத்தேர்வுக்கு மட்டும் 5 மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்பு பயிற்சிகள் காரணமாக, கடந்த 4 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகிய பதவிகளுக்கு 150 பேரும், இந்திய வனப்பணிக்கு (ஐ.எப்.எஸ்.) 12 பேரும் தேர்வுபெற்று பதவியிலும், பயிற்சியிலும் உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு, குரூப்-2 தேர்வு, வி.ஏ.ஓ., தேர்வு, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலமாக இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் வெற்றிபெற்று அரசு பணிகளில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 2011-2012-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வுக்கு மனிதநேயம் மையத்தில் பயிற்சி பெற்று பங்கேற்ற 74 மாணவ-மாணவிகளில் 34 பேர் வெற்றிபெற்றனர். இதில் 26 பேர் மாணவர்கள், 8 பேர் மாணவிகள். இவர்களில் ஏ.தினேஷ்குமார், எம்.ஜே.பிரதீப் சந்திரன், ஆர்.ராமச்சந்திரன், பாலமுரளி, எம்.சுந்தரேஷ்பாபு, சுவாதி, எம்.ஆர்த்தி ஆகிய 8 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி (இந்திய ஆட்சி பணி) ஒதுக்கப்பட்டு இருக்கிறது,

இதேபோல், ஜி.அபர்ணா, சி.கண்ணன், ஜெ.சுகன்யா, டி.ஜெய்சுந்தர் ஆகிய 4 பேருக்கு ஐ.எப்.எஸ். பணியும் (இந்திய வெளிநாட்டு பணி), ஆர்.ராஜா, கே.சசிகுமார், எம்.அருண் ரங்கராஜன், சி.கலைச்செல்வன் ஆகிய 4 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும் (இந்திய காவல் பணி) ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment