PAGEVIEWERS


"ஆண்களுக்கு பெண்கள் போட்டி' என்ற நிலை மாறி இன்று "பெண்களுடன் ஆண்கள் போட்டியிடும் நிலைமை' ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். பெண் என்பவள், மனைவி, தாய், குடும்பத்தலைவி என பல பரிணாமங்களாக திகழ்கிறாள். "உடல் வலிமை ஆண்களுக்கு பலம் என்றால், மன வலிமை பெண்களுக்கு பலம்' என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. "ஒரு உறுதிமொழி: பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை முற்றிலும் நிறுத்துவதற்கான நேரம்' என்பது இந்தாண்டு ஐ.நா.,வின் மையக்கருத்து. பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக, பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதிகார வர்க்கமாக திகழும் அரசியலில், பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பது, இன்னும் கோரிக்கை நிலையில் உள்ளது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது பார்லிமென்டிலும், மத்திய அமைச்சரவையிலும் உள்ள பெண்கள் வெறும் 10 சதவீதம். பெண்களுக்கு கிடைக்க வேண்டிய இந்த உரிமையை, சிலர் சலுகையாக நினைத்து மறுப்பது வேதனைக்குரியது.


ஏன் முடியாது:

ஆண் செய்யும் அத்தனை வேலைகளையும் இன்று பெண்களும் செய்கின்றனர். ஆசிரியை, விண்வெளி வீராங்கனை, டாக்டர், விளையாட்டு வீராங்கனை, இன்ஜினியர், பைலட், தொழில் முனைவோர் என பல துறைகளிலும் வெற்றி நடை போடுகின்றனர்.

சவால் எது:

சுதந்திர இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் அடைந்திருப்பதை மறுக்க முடியது. மறுபுறம் அவர்கள் மீது வன்முறைகளும் அதிகரிப்பது கவலையளிக்கிறது. வரதட்சணை, பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, சிசுக்கொலை போன்றவற்றால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் டில்லியில் இளம்பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்தார். இது போல நாடு முழுவதும் எத்தனையோ வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கின்றன.

எப்படி தடுப்பது:

பெண்கள் மீதான வன்முறையை தடுப்பதற்கு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்கு அதிகார மையங்களில், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தான் சாத்தியம். ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் பெண்களுக்கு பார்லிமென்ட்டில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கு 49 சதவீதத்தினர் பெண்களாக உள்ளனர். பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் பார்லிமென்ட் உறுப்பினர்களில், 37 சதவீதத்தினர் பெண்கள். இது இந்தியாவிலும் சாத்தியமாக வேண்டும். பெண் கொடுமைகளை தடுப்பதற்கு ஆண்களின் மனநிலையிலும் மாற்றம் வரவேண்டும்.

No comments:

Post a Comment