PAGEVIEWERS


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 7, 8-ந் தேதிகளில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஜுலை மாதம் 12-ந் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவு கடந்த 24-ந் தேதி வெளியிடப்பட்டது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வருகிற 7, 8-ந் தேதிகளில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 7-ந் தேதி அன்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 8-ந்தேதி அன்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக்கடிதம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலும் அழைப்புக்கடிதம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அழைப்புக்கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் இந்த இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

அழைப்புக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுயவிவர படிவம், அடையாளச் சான்றிதழ், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களையும் டவுன்லோடு செய்துகொண்டு சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வினை 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதினார்கள். அவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தோல்வி அடைந்த 6 லட்சத்து 52 ஆயிரத்து 315 ஆசிரியர்களுக்கும் கூடுதல் நேரம் (3 மணி நேரம்) கொடுத்து அக்டோபர் மாதம் 3-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment