PAGEVIEWERS


"தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும்
 குழந்தைகளாக இருக்க வேண்டும்

என்ற உறுதிமொழியை எடுத்துச் செல்வது அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டின் செய்தியாக இருக்க வேண்டும்'' என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.

"தினமணி' இதழும், தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய அகில இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டு நிறைவு விழாவில் அவர் ஆற்றிய நிறைவுரை:
இன்று குழந்தைகள் ஆங்கிலப் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். அவர்களைப் படிக்காதே என்று சொல்ல முடியாது. சில போக்குகளை நாம் தடுத்து நிறுத்திவிட முடியாது. அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் அந்தக் குழந்தைகள் தமது தாய் மொழியை மறந்துவிடாமல் இருக்கச் செய்வதற்கு இலக்கிய அமைப்புகளால் மட்டுமே முடியும்.
ஆகவே, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு இலக்கிய அமைப்புகளை நாம் ஏற்படுத்த வேண்டும். அதில் உறுப்பினர்களைச் சேருங்கள். அவர்களிடம் ஒரே ஒரு உறுதிமொழியை மட்டும் வாங்கிக்கொள்ளும். நாங்கள் வீட்டில் தமிழில்தான் பேசுவோம் என்று. வீடுகளில் குழந்தைகளிடம் தமிழில் பேசுங்கள். குழந்தைகள் "டாடி, மம்மி' என்று அழைத்தால் அதற்காக வெட்கப்படுங்கள், அவமானப்படுங்கள். "நாங்கள் தமிழில் பேசுவோம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் உலகில் உள்ள அத்தனை மொழிகளையும் படிக்கட்டும். அதற்கு ஆதரவு கொடுங்கள் ஆனால், வீட்டில் பேசும்போது தமிழில்தான் பேசச் சொல்லுங்கள்.
உலகில் ஒரே ஒரு மொழியில்தான் சிறிய தந்தையை சிற்றப்பா என்றும், பெரிய தந்தையை பெரியப்பா என்றும், மாமா, அத்தை என்று அழைக்கின்ற வழக்கம் தமிழில் மட்டும்தான் உள்ளது. இப்போது யாரைப் பார்த்தாலும் ஆன்டி என்றும், அங்கிள் என்றும் அழைப்பது எத்தனை கேவலம்? யாரைப் பார்த்தாலும் ஆன்டி என்று சொன்னால் எப்படி நாம் என்ன ஆண்டிகளா?
அருமையான மொழியை நாம் கையில் வைத்திருக்கிறோம். அதை மறந்துவிடக்கூடாது. இந்த மாநாட்டை கூடிக் கலைகிறோம் என்று யாராவது நினைத்தால் தவறு. கூட்டம் கூட்டிக் கலைகிறோம் என்று நினைத்தால் தவறு, கூடி மகிழ்கிறோம் என்று சொன்னால்தான் அது உண்மை. இந்தக் கூட்டம் எடுத்துச் செல்கிற சேதியானது என்னவாக இருக்கும் என்றால், இனி எங்கள் வீட்டில் குழந்தைகள் தமிழில் பேசுவார்கள்.
எங்கள் வாரிசுகள் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்பது செய்தியாக இருக்கும். மற்றொரு செய்தி என்னவாக இருக்குமென்றால், அமைப்பு ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தாலும் தமிழால் நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்பதாக இருக்கும். தமிழன் எங்குவேண்டுமானாலும் இருக்கட்டும். அங்கெல்லாம் இலக்கிய அமைப்புகள் தோன்ற வேண்டும்.
வள்ளுவனும், அவ்வைப் பிராட்டியும் அங்கு இல்லாமல் ஒரு தமிழ்க் குடும்பம் இருக்கக் கூடாது. வீட்டுக்கு வீடு ஒரு திருக்குறள் நூல் இருக்கட்டும். உங்கள் குழந்தைகள் ஆத்திசூடி படிக்காத குழந்தைகள் இருக்கக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்துங்கள்.
குழந்தைகள் வீட்டில் நிச்சயமாகத் தமிழ் பேச வேண்டும். ஆகவே, தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்க வேண்டும் இந்த முழக்கத்தை தமிழகத்தின், உலகின் எல்லா வீதிகளிலும், தமிழர்கள் வாழும் இடங்களெல்லாம் எடுத்துச் செல்வதற்கு இந்த மாநாடு பயன்படுமேயானால் மட்டும்தான் இந்த மாநாட்டை வெற்றிகரமானதாக என் மனம் கருதும்.
எங்கெல்லாம் இலக்கிய விழா எடுகிறீர்களோ, அங்கெல்லாம் "தினமணி' ஆசிரியர் என்ற முறையில் கடினமான பணிகளையும் பொருட்படுத்தாமல் செல்கிறேன். தினமணி ஆசிரியர் செல்வதால் தமிழ் எழுச்சி பெறுமானால் அந்த இலக்கிய அமைப்புகள் வளம் பெறுமேயானால் அதைவிட பெரு மகிழ்ச்சி எதுவும் எனக்கு இருக்க முடியாது என்றார் அவர்.

1 comment:

Anonymous said...

அனைத்து ஆசிரியர்களும் பயன்படும் வகையில் இவ்வலைப்பதிவை நடத்தி வருகிறீர்கள். தங்களது உழைப்பிற்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
தங்களது வலைப்பதிவை நமது சாக்பீஸ் வலைப்பதிவில் ”பள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள் பகுதியில் இணைத்துள்ளோம். தளராது தொடரட்டும் தங்கள் சேவை என வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம்.
http://chalkpiece.wordpress.com

Post a Comment