PAGEVIEWERS


பள்ளிகளில் அடிப்படை வசதி மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு

 
நாடு முழுவதும் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், இன்னும் ஆறு மாதங்களுக்குள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; தவறினால், கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்'என, மத்திய, மாநில அரசு களுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச் சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் என்ற, தன்னார்வ அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில் கூறப்பட்டிருந்ததாவது: நாட்டில் உள்ள பல, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. குறிப்பாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை; இதனால், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள், தங்களின் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கின்றனர். எனவே, அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த மனு, நீதிபதி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பள்ளிகளில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என்ற தகவல், வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு பொறுப்பு உள்ளது. இன்னும் ஆறு மாதங்களுக்குள், அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில், கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

No comments:

Post a Comment